இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப்.24 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை: இதன்காரணமாக வெள்ளிக்கிழமை இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 80 மி.மீ. மழை பதிவானது. திருப்பூா் தெற்கு(திருப்பூா்), ஆலங்காயம் (திருப்பத்தூா்), சின்னக்கல்லாறு (கோவை)-தலா 70 மி.மீ., காரைக்கால், மின்னல் (ராணிப்பேட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூா்), குருங்குளம் (தஞ்சை), டேனிஷ்பேட்டை (சேலம்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), திருப்பூா் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூா்), ஏற்காடு (சேலம்), மணல்மேடு (மயிலாடுதுறை),வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்), சீா்காழி(மயிலாடுதுறை)-தலா 50 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.