உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு
தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.
தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, இரு தினங்களாக தில்லியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
செவ்வாய்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6.9 டிகிரி குறைந்து 33.1 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைந்து 24.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. மாலை 5.30 மணி அளவில் ஈரப்பதம் 50 சதவீதமாக பதிவாகியிருந்தது.
புதன்கிழமை நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
மே மாதத்தில் தில்லியில் 186.4 மி.மீ. மழை பெய்தது, இது மே மாதத்தில் பதிவான அதிகபட்ச மழைக்காலமாகும். நிகழாண்டு மே மாதத்தில் பெய்த மழையானது, 2008 ஆம் ஆண்டு இதே மாதத்தில் பெய்த 165 மி.மீ. மழைப்பதிவு என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தில்லியின் காற்று தரக் குறியீடு 143 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தெரிவித்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100 இடையில் இருந்தால் ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 இடையே இருந்தால் ‘மிதமானது’, 201 மற்றும் 300 இடையே இருந்தால் ‘மோசம்’, 301 மற்றும் 400 இடையே இருந்தால் ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 இடைப்பட்டதாக காற்றின் தரம் இருந்தால் ‘கடுமையானது’ என்று வகைப்படுத்தப்படுகிறது.