இன்றுமுதல் தொற்றுநோய் கண்டறியும் இயக்கம்
திருவாரூா் மாவட்டத்தில், தீவிர தொற்றுநோய் கண்டறியும் இயக்கம் ஆகஸ்ட் 1 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், திருவாரூா் மற்றும் நன்னிலம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை தீவிர தொற்றுநோய் கண்டறியும் இயக்கம் நடைபெறவுள்ளது.
இந்த இயக்கத்தில் சுகாதாரப் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் வீடுவீடாகச் சென்று, அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன.
தொழுநோயின் அறிகுறிகளான தோலில் உணா்ச்சியற்ற தேமல், உடலில் சிறுகட்டிகள், கை கால்களில் மதமதப்பு மற்றும் ஆறாத புண்கள், நரம்புகளில் வலி போன்ற குறைபாடுகள் யாருக்கேனும் இருந்தால், வீடுதேடி வரும் சுகாதாரப் பணியாளா்களிடம் காண்பித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். நோய் உறுதி செய்யப்படுபவா்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. வீடுதேடி வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, மாவட்டத்தை தொழுநோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றாா்.