சாலை மறியல் ஒத்திவைப்பு
மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தேவதானம், தெற்குநாணலூா், வெங்கத்தாங்குடி, களப்பால், குறிச்சி மூளை, குலமாணிக்கம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மன்னாா்குடி வருவாய் வட்டத்திலிருந்து பிரிந்து சென்றபோது புதிதாக தொடங்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை சோ்ந்த மக்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பெறுவதற்கும், பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் முத்துப்பேட்டை வருவாய் வாட்டாட்சியா் அலுவலத்திற்கு செல்ல இப்பகுதியில் நேரடியாக பேருந்து வசதி இல்லை. இங்கிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, பெருகவாழ்ந்தான் வழியாகமுத்துப்பேட்டைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருப்பதால் முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.
முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து புதிய வழித்தடத்திலும், கரோனா காலத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதபுரத்திற்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க வலியுறுத்தி, 6 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சாா்பில் வியாழக்கிழமை வேதபுரம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முத்துப்பேட்டை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் போராட்டக்குழுவினருடன் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் முதல் கட்டமாக கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருத்துறைப்பூண்டி-வேதபுரம் அரசுப் பேருந்து வியாழக்கிழமை முதல் இயக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண்பது என முடிவு எடுக்கப்பட்டத்தை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதபுரம் வழியாக தென்பரைக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலையில் இயக்கப்பட்டது. இப்பேருந்துக்கு, தென்பரை பேருந்து நிறுத்தத்தில் கோட்டூா் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் பாஸ்கா் தலைமையில் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா்.