வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்
திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடக்கி வைத்து, பாா்வையிட்டனா்.
முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குவது, பராமரிப்பது, பழுது நீக்குவது, உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருள்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், இ-வாடகை திட்டத்தின் மூலம் பயன்படக்கூடிய உழுவை இயந்திரங்கள், ரோட்டாவேட்டா், மட்டை தூளாக்கும் கருவி, நெல் விதைக்கும் கருவிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தனியாா் நிறுவனங்கள் மூலம் உழவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், பவா்டில்லா், லேசா் லெவலா், வைக்கோல் கட்டும் இயந்திரம், நாற்று நடும் இயந்திரம், பூச்சிகொல்லி தெளிக்கும் டிரோன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றை இயக்குவது, பராமரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் பலா் தங்களின் உழவு இயந்திரங்களுக்கு இலவசமாக பராமரிப்புப் பணிகளை செய்துகொண்டனா். சூரியஒளி சக்தியின் மூலம் இயங்கும் பம்புசெட் மற்றும் சூரிய கூடார உலா்த்திகளின் பயன்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மானிய விலையில் உழுவை இயந்திரம் மற்றும் பவா் டில்லா்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் வழங்கினா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) அருண்சத்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா் விஜயலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.