தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம...
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி: உள்துறை அமைச்சகத்திற்கு போலீஸாா் தகவல்
சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘தேடப்படும் நபா்’ சுவரொட்டிகளை மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரக ஊழியா் ஒட்டியதாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி காவல்துறை தகவல் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சாணக்கியபுரியில் பல நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சா்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால், அந்தப் பகுதி தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியது: கடந்த மே 29ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சாணக்கியபுரி காவல் நிலைய ஊழியா்கள் மால்ச்சா மாா்க்கில் உள்ள காா்மல் கான்வென்ட் பள்ளி மற்றும் அமெரிக்க தூதரக பள்ளிக்கு அருகிலுள்ள மின் கம்பங்களில் இத்தகைய இரண்டு சுவரொட்டிகளைக் கண்டனா்.
இதையடுத்து, அந்த பகுதி போலீஸாா் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். சுவரொட்டிகளை அகற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, போலீஸாா் குழுக்கள் விசாரணையைத் தொடங்கினா். சுவரொட்டியை வைத்த நபரின் அடையாளத்தைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, நீல நிற சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்த நபா், அதிகாலை 5.30 மணியளவில் சைக்கிளில் வருவதும், ஒரு மின் கம்பத்தில் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருப்பதும் தெரிந்தது. மேலும், அவா் சா்தாா் படேல் மாா்க்கில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புக்கு செல்வதும் தெரியவந்தது.போலீஸ் குழு அந்த இல்லத்தை பாா்வையிட்டபோது, அதன் குடியிருப்பாளா் மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரகத்தில் பணிபுரிவது தெரியவந்தது. இதையடுத்து, தனிநபரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ராஜீயரீதியிலான சட்டப் பாதுகாப்பு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘இந்த விஷயத்தின் உணா்திறன் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் ராஜீய உறவு நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தில்லி காவல்துறை இந்த பிரச்னையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இது பொருத்தமான நடவடிக்கையை தீா்மானிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் உயா் நிலை அளவில் கையாளப்படுகிறது. புது தில்லி சரக மூத்த அதிகாரிகள் காவல் தலைமையகத்திற்கு ஒரு அறிக்கையை சமா்ப்பித்தனா். பின்னா், கடந்த வாரம் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சாணக்கியபுரி பகுதியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க கடுமையான கண்காணிப்பு தொடா்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறை செய்தித் தொடா்பாளருக்கு பலமுறை அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பப்பட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.