கோடியூர் வாரச்சந்தை: சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த...
உங்கக் கூட தெருகூத்து பார்த்த தருணம்தான் பெஸ்ட்! - மகனின் நினைவில் நிற்கும் அப்பா | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புடன் இருந்த அப்பாவுக்கு,
என் சிறுவயதிலே நீ என்னையும் மண்ணையும் விட்டு உனக்கு பிடித்த இறைவனிடம் உரையாடல் நிகழ்த்த சென்றுவிட்டாய். உன் உதிரத்தின் மூலம் நான் உருவம் பெற்றதானாலே நம் வீட்டை சுற்றி உள்ளவர்கள் "உன் அப்பன போல நடக்குற, உன் அப்பன போல பேசுற " என்று என்னிடம் கூறுவார்கள். அப்போதெல்லாம் உனது உருவம் தான் என் நினைவிற்கு வரும்.
என்னை அழைத்துக்கொண்டு நீ பழநிக்கு சென்றபோது, அங்கு நான் தொலைந்து போன சம்பவத்தையும், நீ என்னை கண்டுபிடித்ததையும் ஒரு திரைப்படத்தின் கதையை போல் இன்றும் தக்காளி தாத்தா என்னிடம் சுவாரசியத்துடன் கூறுகிறார்.

இதே போல் அம்மாவும் தைப்பூசத்தன்று வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி பார்க்க சென்ற போது, கூட்ட நெரிசலில் என்னை உங்கள் தோள்களில் அமர வைத்து ஜோதியை பார்க்க வைத்ததையும், அப்போது "இந்த விளக்கு எரியுறத பாக்குறதுக்கா இவ்வளவு பேர் வந்துருக்காங்க" என்று நான் கேட்டதையும் இன்னமும் கூறுகிறார். இதுபோன்ற சம்வங்களை அவர்கள் கூறினாலும் எனக்கு அவ்வளவாக அவையெல்லாம் நினைவில் இல்லை அப்பா.
எனக்கு நினைவில் உள்ளதெல்லாம் நம் ஊரை சுற்றி எங்கு தெருகூத்து நடந்தாலும், அன்றிரவு உங்களுடன் நான் கிளம்பிவிடுவேன். இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய கூத்து பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் கூத்தில் அரங்கேறிய நாடகத்தில் இருந்து கேள்விகளை கேட்டு, நாடகத்தின் துணை கதைகளை கூறிடும் காட்சிகளே நினைவில் உள்ளது. உங்களது அந்த பழக்கத்தாலோ ஏனோ நான் இன்று அதிக திரைப்படங்களை பார்க்கிறேன்.

கதை, கவிதைகளையும் எழுதி சிறந்த படைப்பாளனாக மாற முயற்சி செய்கிறேன். 8-ம் வகுப்பு வரை படித்த நீங்கள், இன்று கதை புத்தகம் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளரின் அப்பாவாக இருக்கிறீர்கள். என்னுடன் உங்கள் உருவம் இல்லாது இருக்கலாம், ஆனால் உங்கள் நினைவுகள் அடிக்கடி என்னுள் வந்து செல்கிறத அப்பா.
எனக்கு நீங்கள் சொல்லி தரமால் சில பாடங்களை கற்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டீர்கள். அதனை என் மூச்சு உள்ளவரை நான் பின்பற்றுவேன். நிச்சயம் நான் என் பிள்ளைகளுக்கு உங்களை பற்றி கூறுவேன்.
உங்களுடன் நான் எப்படியெல்லாம் வாழ கனவு கண்டேனோ, அதுபோல் என் பிள்ளைகளுடன் வாழ்ந்திடுவேன். இன்று வீட்டின் சுவற்றில் புகைப்படமாய் இருக்கும் அப்பாவே, என்றைக்கும் நீ என் பெயரின் முதலெழுத்தாகவும், என் வெற்றிகளில் நான் நினைவில் கொள்ளும் முதல் ஆளாகவும் இருக்கிறாய். என் அன்பு நிறைந்த அப்பாவே, என் பிள்ளைகளுக்கு நானும் சிறந்த அப்பாவாக இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் சரி நன்றாக ஓய்வு எடு அப்பா.
-உந்தன் மீது பேரன்பு கொண்ட உன் மகன்
சி.விக்கனராஜ்
