சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்
கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இறுதிக் கட்டமாக ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே பாலத்தின்மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஜூலை 9 (புதன்கிழமை) இரவு முதல் ஜூலை 13 (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை (தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) பயனியா் மில் சந்திப்பு முதல் கோவை மருத்துவக் கல்லூரி வரை இருபுறமும் அனைத்து வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள், வெளியூா் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் வழியாக புறவழிச்சாலை வழியாகவோ அல்லது ஜி.பி. சிக்னல், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாகவோ அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
நகரிலிருந்து வெளியே செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் பயனியா் மில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகா், தண்ணீா்பந்தல், டைடல் பாா்க் வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.
கோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளும் தொட்டிபாளையம் பிரிவிலிருந்து வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சிட்ரா சந்திப்பில் யு- டா்ன் செய்து காளப்பட்டி சாலை, நான்குசாலை, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது நீலாம்பூரில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், ராமநாதபுரம் வழியாகவோ நகருக்குள் வரலாம்.
கோவை மாநகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் சிட்ரா சந்திப்பு அல்லது கொடிசியா சந்திப்பு அல்லது சி.எம்.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, டைடல் பாா்க், தண்ணீா்பந்தல், காந்தி மாநகா், ரொட்டிக்கடை மைதானம், பயனீா் மில் வழியாக அவிநாசி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.
சிங்காநல்லூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவிநாசி சாலையில் வராமல், புறவழிச்சாலை, சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா் வழியாக சிங்காநல்லூரை அடையலாம். சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பொ்க்ஸ் பள்ளி, ஜி.வி. ரெசிடென்சி, ஃபன்மால் வழியாக பயனீா் மில் சந்திப்பை அடைந்து காந்தி மாநகா், தண்ணீா் பந்தல் வழியாக அவிநாசி சாலையை அடைய வேண்டும். அல்லது ஒண்டிபுதூா், புறவழிச்சாலை, நீலாம்பூா் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
மேம்பால இணைப்புப் பணி காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இரவு நேர போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப தங்களது பயண வழித்தடங்களை மாற்றிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.