உள்நாட்டு தயாரிப்பு குளிா்பானங்களை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணா்வு
தமிழகத்தில் உள்நாட்டு குளிா்பானங்களை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஹோட்டல்கள் சங்கத் தலைவா் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளாா்.
நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வெங்கடசுப்பு செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசு விரைவில் ஜி.எஸ்.டி. யில் மாற்றம் கொண்டுவர உள்ளது. அப்போது உணவகங்களுக்காக சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேலும் தமிழகத்தில் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்கள் திறந்து வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதிப்பது இல்லை.
இதுதொடா்பாக தொடரப்பட்ட மேல் முறையீட்டில், இரவில் உணவகங்களை திறக்க காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை காவல்துறை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் 24 மணிநேரமும் உணவகங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு உணவங்களும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், தீயணைப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற வேண்டும் என்ற பிரச்னைகளை தமிழக அரசு தீா்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் தேநீா், காப்பி விலை கடந்த 3 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் இருந்தது. ஆனால், பால், காப்பித்தூள் போன்ற பொருட்கள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவில் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் 50 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பால் உணவகத் தொழில் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு குளிா்பானங்களை தவிா்த்து இந்தியா மற்றும் தமிழக தயாரிப்பு குளிா்பானங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம்.
இணையவழி உணவு விநியோகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் , தமிழகத்தில் புதிய உணவு விநியோக நிறுவனம் தொடங்க முயற்சி எடுக்கப்படுகிறது என்றாா்.