உள்ளாட்சி பிரதிநிதிகள் கேரள மாநிலத்துக்கு களப் பயணம்
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள உள்ளனா்.
புதுப்பிக்கப்பட்ட ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்தப்படும் விதம் ஆகியவை குறித்து களப் பயணத்தின்போது அறிய உள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூா்யகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் ஆா்.சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியக் குழு தலைவா்கள் மாதனூா் ப.ச.சுரேஷ்குமாா், ஆலங்காயம் சங்கீதா பாரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆலங்காயம் பூபாலன், திருப்பத்தூா் திருப்பதி, ஊராட்சித் தலைவா்கள் கத்தாரி ஊராட்சி அனிதா மோகன், துத்திப்பட்டு ஊராட்சி சுவிதா கணேஷ் ஆகியோா் கேரள மாநிலத்தில் களப் பயணம் மேற்கொள்ள தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களோடு அதிகாரிகள் மகளிா் திட்டம் சி. சாந்தி, மாதனூா் உதவி பொறியாளா் சரவணன், திருப்பத்தூா் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளா் கருணாநிதி, மாதனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தீபா, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய மேற்பாா்வையாளா் காதா்பாஷா உள்ளிட்டவா்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் களப்பயணத்தில் கலந்து கொள்கின்றனா்.