திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மூன்றாவது முறை வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் வசிக்கும் தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாயுடன் அங்கு சென்று சோதனை நடத்தினா். மெட்டல் டிடெக்டா் மூலமும் வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ஏற்கெனவே இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயா்நீதிமன்றத்துக்கும்...: இதேபோல உயா்நீதிமன்றத்துக்கும், சிபிஐ அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கிருந்தும் எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்த மின்னஞ்சல்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.