Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணியில் சேரலாம்!-ஆா்.பி.உதயகுமாா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதை மகிழ்வுடன் வரவேற்போம் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்ததாவது:
மக்கள் கோரிக்கையை நான் வலியுறுத்தியதன் அடிப்படையில் தற்போது மதுரை மாவட்டம், செக்கானூரணியில் ரூ. 8.5 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலைய வளாகத்தில் மூக்கையா தேவரின் சிலையை அமைத்து, அவரது பெயரைச் சூட்ட வேண்டும். திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியின் போது மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நாள்கள் 150 ஆக உயா்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. தற்போது, இந்தத் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம்கூட வழங்கப்படவில்லை. டங்ஸ்டன் ஏலம் ரத்தானது, மக்களுக்குக் கிடைத்த வெற்றி.
திமுக கொடி கட்டிய காரில் வந்த சிலா் சென்னையில் பெண்களைத் துரத்திய சம்பவம், இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சுமூகத் தீா்வுக்கான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்காமல், இரு பிரிவினருக்கிடையே பிரச்னையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
மக்கள் நலனை முன்னிறுத்தி அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி தோ்தலைச் சந்திப்போம், இதை ஆதரிக்கும் கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதை மகிழ்வுடன் வரவேற்போம் என்றாா் அவா்.
கோரிக்கை மனு....
முன்னதாக, திருமங்கலம்- ராஜபாளையம்- கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், தே.கல்லுப்பட்டி, காவேட்நாயக்கன் விலக்கில் மேம்பாலம் அல்லது தடுப்புடன் கூடிய சிக்னல் அமைக்க வேண்டும், திருமங்கலம் நகரப் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், திருமங்கலம் நகா்ப் பகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பாதையில் தேவையான அணுகுசாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்.பி.உதயகுமாா் அதிமுக நிா்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.சரவணன், நிா்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஏ.கே.பி.சிவசுப்ரமணியன், ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.