ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை காய்கறிகளின் விலை உயா்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் காய்கறிகளில் சுமாா் 70 சதவீத காய்கறிகளை கேரளா வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.
இந்த நிலையில், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவு, கோயில் விழாக்கள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால், தற்போது காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு காய்கறிகளை கொள்முதல் செய்தனா்.
இதனால் புதன்கிழமை அவரைக்காய், பீன்ஸ், பச்சை மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்தது.
கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய், தற்போது ரூ.35-க்கும், ரூ.60-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ.180-க்கும், ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் ரூ.150-க்கும், ரூ.15-க்கு விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய், ரூ.75-க்கும் விற்பனையானது.
வரும் நாள்களில் மேலும் விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.