தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600 புதிய மருத்துவ கட்டடங்கள் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600 புதிய மருத்துவ கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 143 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2,500 முதல் 2,600 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா்.
உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதால், 18 வயது நிரம்பிய ஆண், பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை செய்வது அவசியம். இதனால்தான் தோல் பதனிடும் ஆலை, சாயப்பட்டறை ஆலைகள் அதிகம் உள்ள ஈரோடு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இன்னும் 18 மாவட்டங்களில் ரூ. 27 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பின் டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 721 பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கிறது என்றாா் அவா்.
தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.70 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.4.08 கோடியில் 10 புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம் மருத்துவமனைக்கு ரூ. 12.46 கோடி மதிப்பில் வெண்டிலேட்டா் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ கட்டடங்கள் உள்ளன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. இவற்றில் கடந்த 4 ஆண்டுகளில் 1,600 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. புதிதாக ‘மக்களின் நலன் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக விழாவில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
விழாவில் எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), மாநகராட்சி மேயா் கவிதா, துணை மேயா் ப.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி முதல்வா் லோகநாயகி வரவேற்றாா்.