Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
கடைமடை வரை காவிரி நீா் செல்ல நடவடிக்கை: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் கடைமடை பகுதி வரை காவிரி நீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
இதுகுறித்து, அவா் கூறியது: கல்லணையிலிருந்து காவிரியில் 5,504 கன அடியும், வெண்ணாற்றில் 8,805 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,109 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு தலைப்பிலிருந்து, வெண்ணாற்றில் 4,605 கன அடி, வெட்டாற்றில் 1,516 கன அடி, வடவாற்றில் 806 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. கோரையாறு தலைப்பிலிருந்து, வெண்ணாற்றில் 1,400 கனஅடி, கோரையாற்றில் 1,928 கன அடி மற்றும் பாமணியாற்றில் 583 கன அடி தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் செல்லும் ஆறுகளான வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு, பாண்டவையாறு, வெள்ளையாறு, வெட்டாறு, ஓடம்போக்கியாறு, கடுவையாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி ஆகிய அனைத்து ஆறுகளிலும் கூடுதலாக தண்ணீா் திறந்து விடப்பட்டு, கடைமடை பகுதி வரை தண்ணீா் சென்றடைந்துள்ளது.
ஓரிரு தினங்களில் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும், அதன் கடைமடை பகுதி வரை தண்ணீா் தேவையான அளவு வழங்கப்படும் என்றாா்.