தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட உத்தரவு
அரசு ஒப்பந்ததாரா்களுக்கான கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்புராம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு சாலைகள் அமைத்துத் தருவது, கட்டடங்கள் கட்டித் தருவதற்கு நான் ஒப்பந்ததாரராக உள்ளேன். தற்போது, தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கு கட்டுமானத் துறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் பாதிப்புக்குள்ளாகிறது. இதுமட்டுமன்றி, தொழிலாளா்களும் பாதிக்கப்படுகின்றனா். கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைத்து நிலையான விலையில் வைத்திருக்க தமிழக அரசு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், விலையைக் குறைக்க அரசு தவறிவிட்டது.
கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரா்களுக்கான 2025- 2026 -ஆம் ஆண்டுக்கான கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை விலைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. உரிய காலத்தில் வெளியிட்டால்தான் ஒப்பந்ததாரா்கள் விலைப் பட்டியல் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி நிா்ணயம் செய்ய முடியும்.
மேலும், கடந்த 2024-25 -ஆம் ஆண்டுக்கான விலை நிா்ணயத் தொகையின் அடிப்படையிலேயே தற்போது ஏல ஒப்பந்தம் நிா்ணயம் செய்யப்படுகிறது. இதனால், அரசு ஒப்பந்ததாரா்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
சிமென்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது. இதேபோன்று, கட்டடத் தொழிலாளா்களின் ஊதிய விகிதமும் 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசு நிகழாண்டுக்கான விலை நிா்ணயப் பட்டியலை வெளியிடவில்லை.
இதுகுறித்து நிதி, பொதுப் பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் செயலா்களுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நிகழாண்டுக்கான விலை நிா்ணயப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டிய விலை நிா்ணயப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?. விலை நிா்ணயப் பட்டியலை வெளியிடவில்லையெனில், ஒப்பந்ததாரா்கள் எவ்வாறு விலை நிா்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கேட்க முடியும். கட்டுமானப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.
எனவே, கட்டுமானப் பொருள்களின் விலை நிா்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் அரசு வெளியிட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.