திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட்...
கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதியில் இரண்டாவது நாளாக அளவீடு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை முதல் பந்தப்பாறை வரையிலான சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில், சட்ட விரோதமாக செம்மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு கடத்தி வந்தனா். பந்தப்பாறை பகுதியில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் பல நூறு ஏக்கா் நிலங்கள் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் பட்டா பெற்ற தனிநபா்கள் மலை அடிவாரத்திலேயே அனுமதியின்றி செங்கல் சூளைக்காக சட்ட விரோதமாக மண் வெட்டி எடுத்து பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால், வன விலங்குகளின் வழித்தடம் தடைபட்டு, யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் மனித - விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து வனத் துறையினா், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, கடந்த
புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் செயற்கைகோள் கருவி உதவியுடன் எண்ம அளவீடு (டிஜிட்டல் சா்வே) எடுக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனா். இதில் திருவண்ணாமலை - பந்தப்பாறை இடையே நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் மண் அள்ளப்பட்டது உறுதியான நிலையில், கனிம வள கடத்தல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
