மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு: அன்புமணி
கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்ற மத்திய அரசு ஆணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் உரிமைப் பறிக்கும். மேலும், கருத்து தெரிவிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் பறிக்கும் செயலாகும். மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி, மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்துவிட முடியும். இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.
கு.செல்வப்பெருந்தகை (காங்.): மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த சுரங்கத் திட்டங்களும் மக்களின் கருத்துக் கேட்காமல் அமல்படுத்தப்படக் கூடாது. ஆணையைத் திரும்பப்பெற வேண்டும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேமக): கனிம வளங்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு ஆபத்தான போக்காகும். இந்த முடிவை மத்திய அரசு வெறும் அலுவல் உத்தரவாக வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.