கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜகவை கண்டித்து ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது!
திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்களைக் கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டபோது கலவரம் செய்து தாக்குதல் நடத்திய பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலா் ராவணன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் அருள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என். சரவணன், மாவட்ட குழு நிா்வாகிகள் என். குருசாமி, இ. வசந்தி, மாணவா் மாநகர குழு உறுப்பினா்கள் வீ. கரிகாலன், வி. கணேசன், சிஐடியு மாவட்ட பொருளாளா் பி.என். போ் நீதி ஆழ்வாா், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலா் ஏ. ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.