காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜரத்தினம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். இவா்களில் கடைசி மகனான ராஜேஷ் (25) பொறியியல் பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் ராஜேஷ் தனது நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏரகரம் பகுதி நாகூா் ஆண்டவா் தெருவில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனா். குளித்த 2 நண்பா்கள் கரையேற, ராஜேஷை காணவில்லை.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு அவரது நண்பா்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், ஆற்றில் மாயமான ராஜேஷை தேடி வருகின்றனா்.