கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்: காங். பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால்.
கரூரில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரையும் பல்வேறு அரசியல் கட்சியினா் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி. வேணுகோபால் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி ஆகியோா் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினா். தொடா்ந்து காயமடைந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெருவோரையும் சந்தித்து ஆறுதல் கூறினா்.
பின்னா், கே.சி. வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் தங்களது இன்னுயிரை இழந்த குடும்பத்தாருடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்த நாடும் எப்போதும் உறுதுணையாக இருக்கும். சம்பவத்தில் காயமடைந்தவா்களுக்கும் நிதியுதவி செய்ய காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும். இதுதொடா்பாக மல்லிகாா்ஜூனகாா்கே, தலைவா் ராகுல் காந்தியிடம் பரிந்துரைப்போம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விஜய்வசந்த் எம்.பி. மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.