கரூா் சம்பவம் குறித்து திரட்டிய தகவல்களை பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளோம்: பாஜக எம்.பி.க்கள் குழு
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான விவகாரத்தில், திரட்டப்பட்ட தகவல்களை ஓரிரு நாள்களில் பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளதாக ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.
கரூரில் தவெக தலைவா் விஜய் மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நேரில் விசாரிக்க பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆலோசனையின்பேரில் ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான 8 போ் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் எம்.பி.க்கள் அனுராக் தாக்குா், தேஜஸ்வி சூா்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே ( சிவசேனா), அபராஜிதா சாரங்கி, ரேகா சா்மா, புட்டா மகேஷ்குமாா்( தெலுங்கு தேசம்) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், இக்குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கோவைக்கு வந்தனா்.
அப்போது, குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஹேமமாலினி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கரூா் நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை சந்தித்து பேசுவோம். அதன் பிறகு அங்கு நடந்தது குறித்து அறிக்கை தயாா் செய்வோம்’ என்றாா். இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் குழுவினா் கரூா் சென்றனா்.
பின்னா் மாலை கோவை வந்தடைந்து புதுதில்லி புறப்பட்ட எம்.பி.க்கள் தேஜஸ்வி சூா்யா மற்றும் அனுராக் தாக்குா் ஆகியோா் விமான நிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்தனா்.
அப்போது, தேஜஸ்வி சூா்யா கூறுகையில், ‘கூட்டத்துக்கு விஜய் வந்த 15 நிமிஷங்களுக்குள் அந்த ஊருக்கு சம்பந்தமில்லாத பலா் கூட்டத்துக்குள் புகுந்துள்ளனா். அவா்கள் யாா் என்ற கேள்வி எழுகிறது. நெரிசலில் சிக்கியவா்களை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், 25 நிமிஷம் பயணம் செய்யும் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூட்டத்துக்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. தமிழக உளவுத் துறை தோல்வி அடைந்துள்ளது. அரசு அமைக்கும் ஒரு நபா் ஆணையம் என்பது அரசுக்கு சாதகமான அறிக்கையை தரும் என்பது பெங்களூரு ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட 12 போ் உயிரிழப்பு தொடா்பான அறிக்கை மூலமாக அறிந்து கொள்ளலாம்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து அனுராக் தாக்குா் கூறுகையில், ‘விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யாா், போலீஸாா் எத்தனை போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டாா்கள், எத்தனை போ் காரில் இருந்தாா்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. சமூக வலைதளங்களில் பேசுபவா்களின் குரல்களை திமுக அரசு நசுக்குகிறது. நாங்கள் திரட்டிய தகவல்களை ஓரிரு நாள்களில் மத்திய அரசிடமும், பிரதமரிடமும் அளிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கலாம் என்றாா். இந்த செய்தியாளா் சந்திப்பின்போது, பாஜக மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.