பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
நெல்லை மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கிறது. மழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. எனவே நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அவசர அவசரமாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில வானிலை ஆய்வு மையம் அறிவிப்பைத் தொடர்ந்து இன்று காலை முதல் நெல்லையில் கேடிசி நகர் தருவை முன்னீர் பள்ளம் மானூர் அம்பாசமுத்திரம் போன்ற புறநகர் மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. குறிப்பாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளான ஊத்து நாலுமுக்கு போன்ற இடங்களில் கனமழை பெய்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை நீடித்து வருகிறது.
வானிலை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் மற்றும் நீர்நிலைகள் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் இன்றும் நாளையும் கடலில் சீற்றம் இருக்கும் என்பதால் இரண்டு நாள்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சம் மாஞ்சோலை ஊத்தில் 28 மி.மீட்டர் மழையும், நாலுமுக்கில் 23 மில்லி மீட்டரும், காக்காசியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் மழை காரணமாக களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள நம்பி கோயிலுக்குச் செல்ல இன்று வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.