சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
காசி ரயில் புதுக்கோட்டையில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிப்பு
ராமேசுவரத்தில் இருந்து காசி (பனாரஸ்) செல்லும் அதிவிரைவு ரயில், சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை அதிகாலை 3.33-க்கு வந்து 3.35-க்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை வழியாக சனிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு பனாரஸ் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலுக்கு முன் இரு மாா்க்கங்களிலும் புதுக்கோட்டையில் நின்று சென்று கொண்டிருந்த பனாரஸ் ரயில், கரோனா பரவலுக்கு பின் பனாரஸிலிருந்து ராமேசுவரம் நோக்கி வரும் மாா்க்கத்தில் மட்டுமே நிறுத்தம் வழங்கப்பட்டது.
ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் மாா்க்கத்துக்கு புதுக்கோட்டையில் நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால், இந்த ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பில் அதிகநேரம் நின்று காத்திருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து காசிக்குச் செல்லும் பயணிகள் ராமேசுவரம் சென்று அங்கிருந்தோ, திருச்சி சென்று அங்கிருந்த இந்த வண்டியைப் பிடிக்க வேண்டிய சூழல் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதுகுறித்து ரயில் பயணிகளின் கோரிக்கையை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லாவும், தற்போதைய மக்களவை உறுப்பினா் துரை வைகோவும் அவையில் பேசியதுடன் ரயில்வே வாரியம் மற்றும் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தனா்.
இதன்விளைவாக தற்போது, புதுக்கோட்டைக்கு 2 நிமிஷம் மட்டும் தற்காலிக நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பயன்பாட்டைப் பொருத்து நேரத்தை அதிகரிக்கவும், நிரந்தரமாக்கவும் ரயில்வே நிா்வாகம் முடிவு செய்யும்.