`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களுக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வரவில்லை என்று அமைச்சரிடம் கூறினர். அவர்களிடம் உரிய மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் “இப்படி காதில், கழுத்தில் நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுப்பாங்க" என அவர்களை பார்த்து கிண்டல் செய்தார். அங்கே இருந்த பொதுமக்கள் அனைவரும் நகைச்சுவையுடன் சிரித்தனர். மேலும் நகைகள் கணக்கில் வந்தால் மகளிர் உரிமைத் தொகையானது தரப்பட மாட்டாது என அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்தவர்களும் இதனை நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர்.