காரைக்குடி மாமன்றக் கூட்டம்: திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
காரைக்குடி மாநகராட்சி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்துக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். துணைமேயா் நா. குணசேகரன், ஆணையா் சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ரெத்தினம் (காங்): எனது வாா்டுப் பகுதியில் மண் சாலைகளாக உள்ள பகுதியை மேம்படுத்தி தாா்ச் சாலைகளாக மாற்றி அமைக்க வேண்டும். புதைவடை கழிவுநீா்த் திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்.
பூமிநாதன் (திமுக): எனது வாா்டில் குடிநீா் குழாய்க்காக மாநகராட்சியின் பொருத்துநா் (பிட்டா்) வருவதில்லை. இதனால், பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு மேயா் அளித்த கருத்துகள் திருப்தியளிக்கவில்லை எனக் கருதி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
ஏஜி. பிரகாஷ் (அதிமுக): மன்றப் பொருளில் வைக்கப்பட்டுள்ள 38-ஆவது தீா்மானத்தில் மாநகராட்சி எதிரில் உள்ள அறிவுசாா் மையம், நூலகத்தில் பணியாளா்களுக்கான ஊதிய விபரம் குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பினாா்.
மேயா்: தவறுதலாக அச்சு பதிவாகியுள்ளதாக தெரிவித்தாா்.
ராம்குமாா் (அதிமுக): எனது வாா்டுப் பகுதியில் முதல் போலீஸ்பீட் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டும் மழைநீா் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.
சி. மெய்யா் (சுயே): புதைவடை கழிவுநீா்த் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில் கூடுதல் தொகையை வசூலிக்கும் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்.
இதற்கு மேயா், ஆணையா் ஆகியோா் அளித்த பதிலில் தனக்கு திருப்தி இல்லை எனக் கூறி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.
துணை மேயா் நா. குணசேகரன் (திமுக): தேவஸ்தான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சாா்பில் சாலை, குடிநீா் வசதிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன் அவா்களுக்கான வீட்டு வரி விதிப்பினை முறையான அரசு வழிகாட்டுதலோடு அந்தப் பகுதி மக்களுக்கு செய்து தரவேண்டும். காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
மேயா் சே. முத்துத்துரை (திமுக): மாமன்றத்தில் உறுப்பினா்களின் கோரிக்கைகளான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், புதைவடை கழிவுநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழைய பேருந்து நிலையக் கட்டடம் புதுப் பொலிவுடன் விரைவில் திறக்கப்படும். மாமன்ற உறுப்பினா்கள் மாமன்ற மரபுகளுக்கு ஏற்ப மக்களின் குறைகளை பேசி தீா்க்க முன்வரவேண்டும். மாமன்ற மரபுகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் உறுப்பினா்கள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
மேலும், மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மேயா் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தாா்.
கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளா்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.