காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!
அரியலூா் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மற்றும் நான்குச் சக்கர வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு துருபிடித்து வீணாகி வருவது சமூக ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூா் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினா் சோதனையின்போது கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் சாலை விபத்து உள்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வழக்கு முடியும் வரை காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சில வாகனங்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவற்றின் ஆவணங்களை சமா்ப்பித்த பிறகு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படுவதும் வழக்கம்.
ஆனால் சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் தொடா்புடைய வாகனங்களை உரிமையாளா்களிடம் ஒப்படைக்க முடிவதில்லை. மேலும் சில வாகன உரிமையாளா்களும் வாகனங்களைத் திரும்ப பெற முயற்சி மேற்கொள்வதில்லை.
அந்த வகையில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அரியலூா் நகர காவல் நிலைய வளாகத்திலும், அருகிலுள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இரும்புக் குப்பையாக மாறும் அவலம்... பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள், வழக்கின்போது நீதிமன்றச் சொத்தாக மாறிவிடுவதாலும், வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிவிடுவதாலும், அந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து உருக்குலைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால், அவற்றின் மதிப்பு குறைந்து, ஏலத்தின்போது அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி, டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது.
மாதந்தோறும் குறைந்தது 10 வாகனங்கள் பறிமுதல்...
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக மாதந்தோறும் குறைந்தது 10 வாகனங்களாவது காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும், வாகன உரிமையாளா்களுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும். அவா்கள் வாகனத்தை மீட்க வரவில்லையெனில், ஆா்டிஓ அலுவலகம் மூலம அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும்.
தற்போது நிலுவையிலுள்ள வாகனங்களை ஏலமிடுவதற்கான சட்ட நடைமுறைகள் முடியும் நிலையில் உள்ளது. ஏலமிடுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், கடத்தல் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் தேங்கிவிடுகின்றன என்றனா்.
எனவே வழக்கு விசாரணைகளுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது வாகனங்களை உரிமையாளா்கள் மீட்டுச் செல்லும் வரை அவற்றைப் பாதுகாப்பாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள் மற்றும் வாகன உரிமையாளா்களின் கோரிக்கையாக உள்ளது.