காஸாவில் முழு போா் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ‘காஸாவில் இடைக்கால போா் நிறுத்தம் போதாது; முழுமையான போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நடைபெற்ற பொது விவாதத்தின் போது ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் இந்த வலியுறுத்தலை முன்வைத்தாா்.
காஸா மீது தொடா் தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கும் தடை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை காஸாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஸாவில் மருத்துவமனைகள், மனிதாபிமான உதவி மையங்கள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பட்டினியால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.
இதனால், சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மாா்க், எஸ்டோனியா உள்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தன. போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தின.
இந்தியா தரப்பிலும் இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பங்கேற்ற பா்வதனேனி ஹரீஸ் பேசியதாவது:
காஸாவில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போதிய மருத்துவச் சேவைகள் கிடைக்காதது, கல்வி அணுகல் இல்லாதது என தினசரி போராடும் மக்களின் தீவிர மனிதாபிமான சவால்களை நிவா்த்தி செய்வதற்கு இடைக்கால போா் நிறுத்தங்கள் போதுமானதாக இருக்காது. எனவே, காஸாவில் முழுமையான போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.
காஸா மக்கள் எதிா்கொண்டு வரும் மனிதாபிமான சவால்கள் தொடா்வதை அனுமதிக்கக் கூடாது. அந்த மக்களுக்கு உரிய நேரத்தில் நிலையான பாதுகாப்பான மனிதாபிமான உதவிகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
போா் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவந்து, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைகள் மூலம் தீா்வு காண்பதே சாத்தியமான வழியாக இருக்கும் என்றாா்.
மேலும், ‘பாலஸ்தீனத்துடன் வரலாற்று சிறப்புமிக்க வலுவான உறவை இந்தியா கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த முதல் இஸ்லாமியா் அல்லாத நாடு இந்தியாவாகும். பாலஸ்தீன மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.