கிரீன் ஸ்கிரீனில் படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன்: கார்த்திக் சுப்புராஜ்
கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 கோடியில் ஒரு படம் எடுப்பதை விட அந்தத்தொகையில், 20 அல்லது 30 படங்களை இயக்குவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
கிரீன் ஸ்கிரீன் படங்கள் எடுப்பதை வெறுப்பதாகவும், உண்மையான கதைக்களத்தில் படம் எடுப்பதையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் இயக்குவது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளதாவது,
''ஆயிரம் கோடியில் படம் இயக்க வேண்டுமென்றால், அதில் எண்ணற்ற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இடம்பெற வேண்டியுள்ளது. அதனை கிரீன் ஸ்கிரீனில் படம் பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதுபோன்று படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன். உண்மையான கதைக்களத்தில் உண்மையான மனிதர்களுக்கு மத்தியில் உண்மையான படத்தை எடுக்கவே விரும்புகிறேன். அந்த ஆயிரம் கோடியில் 20 அல்லது 30 படங்களை இயக்குவேன்'' எனக் குறிப்பிட்டார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கமர்ஷியல் படங்களை எடுத்துவந்தாலும், அதில் உண்மைத் தன்மையை விரும்பும் இயக்குநராகவே உள்ளார். இறைவி, ஜிகர்தண்டா, மெர்க்குரி உள்ளிட்டப் படங்கள் இவர் இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்தவை. சமீபத்தில் இவர் இயக்கிய ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுவரை 9 படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மொழி விவகாரம்: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்!