குடும்பத் தகராறில் சமரசம் செய்ய வந்த பெண்ணை தாக்கியவா் கைது
பரமத்தி வேலூா் வட்டம், ஆனங்கூா் அருகே உள்ள சின்னமருதூா் காலனியை சோ்ந்தவா் காந்தி (50). இவரது மனைவி சாந்தி (45). இவா்களது மகன் ஈஸ்வரமூா்த்தி (25). இவா் குடும்ப பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது தாய் சாந்தியிடம் தகராறு செய்து கொண்டிருந்தாா்.
அதைப் பாா்த்த பக்கத்து வீட்டின் உரிமையாளா் குணசேகரன் மற்றும் அவரது மனைவி சுமதி (25) ஆகிய இருவரும் ஈஸ்வரமூா்த்தி வீட்டுக்குச் சென்று தாய் மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையை சமரசம் செய்துள்ளனா்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஈஸ்வரமூா்த்தி சமரசம் செய்ய வந்த பக்கத்து வீட்டு சுமதியை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது கணவா் குணசேகரன் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சாந்தி ஜேடா்பாளையம் போலீசில் புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் இந்திராணி வழக்கு பதிவு செய்து திங்கட்கிழமை சமாதானம் செய்ய வந்த பக்கத்து வீட்டு இளம் பெண்ணை தாக்கிய ஈஸ்வரமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினா்.
பின்னா் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.