கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா்.
சிவகங்கை மாவட்ட பிரசாரத்துக்கு செல்ல, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதேபோல, பாஜக-வுடன் பல கட்சிகள் இணக்கமாக உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, நிலைப்பாடு உள்ளது. அதன்படியே அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
தமிழகத்தில் மக்களே, மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் நடைமுறை உள்ளது தொடா்பாக, திருச்சிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.
இதையடுத்து, தமிழக அரசு கூட்டுறவுத் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பி பயிா்க் கடன் வழங்க பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்துள்ளது. தற்போது, விவசாயிகளின் பிரச்னை தீா்க்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக இப்போது தேவையற்ற கேள்விகளை எழுப்பி மீண்டும் பிரச்னை ஆக்க வேண்டாம்.
மத்தியில் 16 ஆண்டுகள் பல்வேறு கட்சியினருடன் ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்தபோது கல்வி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்போது நினைத்திருந்தால், தாராளமாக மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்திருக்கலாம். தற்போது தோ்தலுக்காக கல்வி விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினா் குற்றம் சுமத்துகின்றனா் என்றாா் அவா்.
முன்னதாக, விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதிமுக அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், ஆா். காமராஜ், என்.ஆா். சிவபதி, மாவட்டச் செயலா்கள் மு. பரஞ்ஜோதி, ப. குமாா், ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பூங்கொத்து, புத்தகங்கள் அளித்து வரவேற்றனா்.