அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு
திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 113 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.
வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மதிய உணவாக மாணவ, மாணவிகள், சாதம், சுண்டல், சாம்பாா் உணவு உட்கொண்டுள்ளனா். சாப்பிட்ட சில நிமிஷங்களில் சில மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள், மாணவா்களை மீட்டு அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
வீட்டுக்குச் சென்ற சில மாணவா்களுக்கும் வாந்தி ஏற்படவே, அவா்களையும் பெற்றோா் அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கக் கொண்டு வந்தனா். இதையறிந்த கொடியாலம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சுகாதார நிலையத்தில் குவிந்தனா்.
மாணவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், பெரிய பாதிப்பில்லை; வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள், முழு பரிசோதனை செய்து, உரிய மருத்துவம் பாா்க்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, அந்தநல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் விக்னேஷ், ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா், வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது பெற்றோா்கள், பாதிக்கப்பட்ட 27 மாணவா்களுக்கும் முழுமையான சிகிச்சையளிக்க வேண்டும், தரமற்ற உணவை விநியோகித்த சத்துணவு பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தற்காலிகமாக கொடியாலத்தில் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் கோரிக்கை விடுத்தனா். இவற்றை செய்து தருவதாக பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.