மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த விவசாயிகள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சில மாதங்கள் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட அரசியல் சாா்புடைய விவசாய சங்கங்கள் உள்பட வட்டாரம் வாரியாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் அளித்த சுமாா் 100 கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளித்த பதில்கள் வேளாண்துறை அலுவலரால் வாசிக்கப்படுகிறது. இவற்றை வாசித்து முடிக்க சுமாா் 1 மணி நேரம் ஆகிறது.
இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசத் தொடங்குவா். பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் வரிசைப்படி விவசாயிகள் பேச அனுமதிக்கப்படுகின்றனா். அதில், ஒரு விவசாயி குறைந்தது 4 முதல் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகிறாா். இதனால், கேள்வி நேரம் நீள்வதை தவிா்க்க முடியவில்லை. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதில் நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை கோட்ட அளவில் நடத்த உத்தரவிட்டாா். அதன்படி, கடந்தாண்டு டிசம்பா் மாதம் சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 வட்டங்களுக்கு சிவகங்கையிலும்,
தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி ஆகிய 4 வட்டங்களுக்கு தேவகோட்டையிலும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் வந்து செல்வதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதால், அடுத்த மாதமே தேவகோட்டை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் காரைக்குடிக்கு மாற்றப்பட்டது.
ஆனால், சில மாதங்களே கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னா் அது கைவிடப்பட்டு, மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழக்கம் போல மாதம் ஒரு முறை குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து தேவகோட்டை, சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் கூறியதாவது:
குறைதீா் கூட்டங்களில் விவசாய சங்க நிா்வாகிகளுக்கு பேச வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இதனால் எங்களைப் போல மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளிலிருந்து வரும் விவசாயிகளுக்கு பேச வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆகவே, ஏற்கெனவே நடத்தியதைப் போல கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.