மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப் படை போலீஸாா் 5 பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கடந்த 14-ஆம் தேதி மதுரை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்றப் பதிவாளரிடம் அஜித்குமாா் வழக்கு தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி. மோகித்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா். மேலும், அஜித்குமாா் கொலை வழக்கைப் பதிவு செய்த திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் இரு சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
இதனிடையில், திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப் படை போலீஸாா் 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு:
இந்தநிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப் படை போலீஸாா் 5 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாயனது.