பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
கோயில் காவலாளி கொலை வழக்கு: 6 பேரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரின் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் 5 பேரையும் திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டாா். முதல் கட்டமாக, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட நபா்களிடம் விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், கோயில் காா் ஓட்டுநா் காா்த்திக்வேலு, காவல் வாகன ஓட்டுநா் ராமச்சந்திரன், நண்பா்களான காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ஆம் தேதி முன்னிலையாகி விளக்கம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, நவீன்குமாா், கோயில் தட்டச்சா் பிரபு, கோயில் காவலாளிகள் பிரவின், வினோத், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 போ் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் முன்னிலையாகினா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். காலை 9. 30 மணிக்கு தொடங்கிய விசாரணை பல மணி நேரம் நீடித்தது.
சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு: இதனிடையில், சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அஜித்குமாா் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே பலகட்ட விசாரணைகளை முடித்து தடயங்களைச் சேகரித்தனா். தற்போது, தனிப்படை போலீஸாா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அஜித்குமாரைத் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற பகுதிகளில் உள்ள 9 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றைச் சேகரித்தனா்.
இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு வந்த துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் உள்ளிட்ட நான்கு சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு காவல் ஆய்வாளா் ரமேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினா்.
பின்னா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலா் கண்ணன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், கைது செய்யப்பட்ட காவலா்கள் பிரபு, ஆனந்த் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்றபோது அவை பூட்டப்பட்டிருந்தன.
இதேபோல, சி.பி.ஐ. துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் தலைமையில் நான்கு அதிகாரிகள், அஜித்குமாரின் உடலைக் கொண்டு சென்ற சிவகங்கை தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றனா். அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனா் . பின்னா், மருத்துவமனையிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றினா். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.