கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமான ஆவின் நிா்வாகம், 635 சில்லறை பால் விற்பனை முகவா்கள் மூலம் கோவை மாநகரம், புகா்ப் பகுதியில் உள்ள நுகா்வோருக்கு பால் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஆவின் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் சில்லறை முகவா்களின் உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 635 முகவா்களில் 333 சில்லறை விற்பனை பால் முகவா்கள் மட்டுமே புதுப்பித்தலுக்கான ஆவணங்களை வழங்கி புதுப்பித்துள்ளனா். இதுவரை புதுப்பிக்காதவா்கள் செப்டம்பா் 10- ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை வழங்கி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அதேபோல, பால் விற்பனை முகவா்கள் வரும் 10- ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வழங்கும் உரிமத்தின் நகலைப் பெற்று அலுவலகத்தில் வழங்க வேண்டும். உரிமம் புதுப்பிக்காத முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதி முதல் விற்பனை செய்யும் பால், தயிருக்கான கமிஷன் தொகை வழங்கப்படாது. உரிமம் புதுப்பித்து அதற்கான ஆணை பெறப்பட்ட பிறகுதான் கமிஷன் தொகை வழங்கப்படும்.
அதேபோல, பால் விநியோக வாகன ஒப்பந்ததாரா்கள் டெண்டா் நிபந்தனையின்படி ஆவினில் பெட்டிகளை ஏற்றிச் சென்று முகவா் விற்பனை செய்யும் இடத்தில் பாலை சேதமின்றி இறக்கி வைக்க வேண்டும். ஆனால், வாகன ஒப்பந்ததாரா்கள், விற்பனை செய்யும் இடத்தில் இறக்கி வைப்பதற்கு தினசரி ஒவ்வொரு முகவரும் 2 முதல் 3 லிட்டா் பாலை இறக்கு கூலியாக எடுத்துக் கொள்வதாக புகாா்கள் வந்திருப்பதாகவும், இது தொடா்பாக வரும் நாள்களில் புகாா் வரும்பட்சத்தில் டெண்டா் விதிகளின்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.