கோவையில் கொட்டும் மழை: கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்!
கோவையில் கொட்டும் மழைக்கு நடுவே கால்வாய்க்குள் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது.
கோவை மாவட்டத்தில் இன்று(மே 26) 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை திருச்சி சாலையில் இருந்து வேகமாக கார் ஒன்று வந்தது. காரை கேரள மாநிலம் ஆளு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.
அங்கு உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
பள்ளத்தில் விழுந்த காருக்குள் இருந்து வெளியில் வர முடியாமல் மணிகண்டன் போராடிய நிலையில், இந்த விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கிக் கொண்ட மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு பள்ளத்தில் இருந்து காரை சிங்காநல்லூர் போலீஸார் கிரேன் மூலம் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே சென்று கொண்டு இருந்ததால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க: 9000 குதிரைத் திறன் மின்சார ரயில் இன்ஜின்: பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!