ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்
கௌண்டன்யா ஆற்று பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், உயா்த்தியும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் செல்லும் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே காமராஜா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்றும், கெங்கையம்மன் கோயில் அருகே இருந்த தரைப்பாலம் ஒன்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்தது.
மழைக் காலங்களில் ஆற்றில்வெள்ளம் வரும் போது தரைப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படும். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் நடந்து செல்பவா்களும், வாகன ஒட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனா். நாளுக்குநாள் மக்கள்தொகை உயா்வு காரணமாக நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே, ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், குடியாத்தம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பல ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்த தரைப் பாலத்தை அகற்றி விட்டு ரூ.14- கோடியில் சிறு உயா்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது.
புதிய பாலத்தின் இரு பக்கவாட்டிலும் சுமாா் 2- அடி உயரமே உள்ள சிமெண்டால் ஆன தூண்கள், அதிக அளவு இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாலத்தைபயன்படுத்தும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். தூண்களின் உயரத்தை அதிகரிக்கவேண்டும். தூண்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதற்கிடையில் இந்த பாலத்தில் நடந்த இரு வேறு விபத்துகளில் 2- போ் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, பாலத்தை உபயோகிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன்கருதி பாலத்தின்பக்கவாட்டு தூண்களின் உயரத்தை அதிகரித்தும், தூண்களின் இடைவெளியை குறைக்கும்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.