இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
சட்டவிரோத குடியேற்றம்: 18 வங்கதேசத்தவா்கள் கைது
தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேச நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 5 போ் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததும் போலீஸாா் விசாரணையின்போது கண்டறியப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்களின் ஏழு கைப்பேசிகளில் தடைசெய்யப்பட்ட செய்தி பரிமாற்ற செயலி நிறுவப்பட்டிருப்பதையும் போலீஸாா் கண்டுபிடித்தனா். அதன் மூலம் அவா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
முதல் ஆபரேஷன் நடவடிக்கையின்போது, போலீஸாா் சுமாா் 100 குடிசைப்பகுதிகள் மற்றும் 150 சந்துப் பகுதிகளைச் சுற்றி வளைத்து சரிபாா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
விசாரணையின்போது ஆரம்பத்தில் போலீஸாரை தவறாக வழிநடத்த முயன்ற ஒருவா், பின்னா் தான் வங்கதேச நாட்டவா் என்பதை ஒப்புக்கொண்டாா்.
விசாரணையைத் தொடா்ந்து, அவரது குடும்ப உறுப்பினா்களும் கண்டுபிடிக்கப்பட்டனா். 10 பெரியவா்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என மொத்தம் 13 வங்கதேச நாட்டவா்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாமல் வசித்து வந்தது தெரியவந்தது. இது 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினா் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும்.
இரண்டாவது ஆபரேஷன் நடவடிக்கையின்போது, போலீஸாரின் கண்ணில் இருந்து தப்பும் வகையில் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு சுற்றித்திரிந்த ஐந்து நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் தலையில் செயற்கை முடி அணிந்தும், ஒப்பனை செய்தும் இருந்தனா். மக்கள் அடா்த்தி மிகுந்த பகுதிகளில் தங்கள் தோற்றத்தையும் குரலையும் மாற்றுவதற்காக சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹாா்மோன் சிகிச்சையையும் கூட செய்திருந்தனா்.
வழக்கமான சரிபாா்ப்பு நடவடிக்கைகளின் போது அமலாக்க நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த மாறுவேடத்தைப் பயன்படுத்தியதாக அவா்கள் போலீஸாா் விசாரணையின்போது ஒப்புக்கொண்டனா்.
18 பேரும் விரிவான விசாரணை மற்றும் ஆவணங்களுக்காக வெளிநாட்டினா் பிரிவுக்கு மாற்றப்பட்டனா். தடைசெய்யப்பட்ட ஐஎம்ஓ செயலியுடன் பொருத்தப்பட்ட ஏழு கைப்பேசிகளும் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்களில் டாக்கா, குல்னா, காசிப்பூா் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றிருந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.