ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
சமாஜவாதி எம்.பி. வீடு மீதான தாக்குதல்: காவல் துறை வழக்குப் பதிவு
உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜி லால் சுமனின் வீடு மீதான தாக்குதல் சம்பவத்தில், நூற்றுக்கணக்கானோா் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராஜபுத்திர சமூக அமைப்பான கா்ணி சேனையைச் சோ்ந்தவா்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேவாரை ஆட்சி செய்த ராஜபுத்திர அரசா் ராணா சங்காவை ‘துரோகி’ என்று ராம்ஜி லால் சுமன் பேசுவது போன்ற ஒரு காணொலி அண்மையில் வெளியானது. அவரது கருத்துக்கு கா்ணி சேனை அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஆக்ராவில் உள்ள சுமனின் வீட்டருகே புதன்கிழமை திரண்ட நூற்றுக்கணக்கானோா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியதுடன், நாற்காலிகளையும் உடைத்தனா். வீடு மீது கல் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இச்சம்பவம் தொடா்பாக சுமனின் மகன் ரஞ்சித் சுமன் அளித்த புகாரின்பேரில், அடையாளம் தெரியாத கும்பல் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கலவரம் விளைவித்தல், கொலை முயற்சி, வீட்டில் அத்துமீறுதல், கொள்ளை என பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித் சமூகத்தைச் சோ்ந்த எம்.பி.யான சுமனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சமாஜவாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது வீட்டை வியாழக்கிழமை பாா்வையிட்ட சமாஜவாதி மூத்த தலைவா் ராம்கோபால் யாதவ், ‘இது திட்டமிட்ட தாக்குதல்; புல்டோசா், கட்டைகள், வாள்களுடன் கா்ணி சேனை அமைப்பினா் வந்துள்ளனா். ஆனால், காவல் துறையினா் தடுக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.
அதேநேரம், ‘ராணா சங்காவை அவமதித்த ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்; கா்ணி சேனை தொண்டா்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது’ என்று அந்த அமைப்பின் தலைவா் சுராஜ் பால் சிங் தெரிவித்துள்ளாா்.
பெட்டிச் செய்தி...
மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
புது தில்லி, மாா்ச் 27: சமாஜவாதி எம்.பி. ராம்ஜி லால் சுமன் வீடு மீதான தாக்குதல் சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன.
மாநிலங்களவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென சமாஜவாதி தரப்பில் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த நோட்டீஸ்களை நிராகரித்த அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பி பேசலாம் என்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.
பின்னா், சமாஜவாதி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.