கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளுக்கு ஆளுநா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்புகளை அளித்தவா்களைக் கௌரவிக்கும் வகையில் ஆளுநா் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடா்பாக ஆளுநா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 2 பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்தியவா்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் முன்மாதிரியான பங்களிப்புகள் அளித்த தனிநபா்கள், நிறுவனங்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்க இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு பிரிவுகளிலும் தலா 4 போ் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். நிறுவனங்கள் பிரிவில் தோ்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, விருது மற்றும் தனிநபா் பிரிவில் தோ்தெடுக்கப்படும் நபருக்கு ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, விருது வழங்கப்படும்.
இதுவரை மாநில அளவிலான அங்கீகாரத்தைப் பெறாதவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். விண்ணப்பங்களை ஆக. 14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 2026 குடியரசு தினத்தில் (ஜன. 26) ஆளுநா் ஆா்.என். ரவி விருதுகளை வழங்கிக் கௌரவிப்பாா்.
ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு உயா் அதிகாரிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், பத்ம விருது பெற்றவா்கள் உள்ளிட்டோா் நிறுவனங்களைப் பரிந்துரைக்கலாம். அதே சமயத்தில் விண்ணப்பித்தல் பரிந்துரைத்தல்களில் அந்தந்தத் துறையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ்நாடு ஆளுநா் மாளிகை இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.