செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
செங்கம் நகரில் போளூா் சாலையில் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் அருள்பிரசாந்த் தலைமையிலான போலீஸாா், பத்திரப்பதிவு செய்ய வந்தவா்களை வெளியில் அனுப்பினா்.
பின்னா், பத்திரப்பதிவு அலுவலா் சிவசங்கரன் மற்றும் பணியாளா்களிடம் சோதனை செய்தனா். அப்போது, கணக்கில் வராத பணத்தையும், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினா். மேலும், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து இரவு 7 மணி வரை விசாரணை நடைபெற்றது.
இதுகுறித்து, காவல் ஆய்வாளா் அருள்பிரசாந்திடம் கேட்டபோது, கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முழுமையாக
முடிந்த பின்னா்தான் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.
செங்கம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையால் நகரில் உள்ள பிற அரசு அலுவலகங்களில் பரபரப்பு நிலவியது.