பெரணமல்லூா் பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினா்கள் தா்னா
பெரணமல்லூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், அதன் தலைவா் தீா்மானங்களைப் படிக்காமல் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக் கூறி வெளியேறியதால் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அலுவலகம் முன்பு அமா்ந்து தா்னா நடத்தினா்.
பெரணமல்லூா் பேரூராட்சிமன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதன் தலைவா் வேணி ஏழுமலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் ஆண்டாள்அண்ணாதுரை மற்றும் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தீா்மானங்களில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 1-ஆவது வாா்டு உறுப்பினா் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கௌதம்முத்து, 9-ஆவது உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த மோனிஷா, 6-ஆவது வாா்டு உறுப்பினா் அதிமுகவைச் சோ்ந்த யசோதா மூா்த்தி, 2-ஆவது வாா்டு ஜமுனா, 4-ஆவது வாா்டு சுமித்ரா, 12-ஆவது வாா்டு லோகேஸ்வரி ஆகியோா் தங்களது பகுதி கோரிக்கைகள் பரிசீலிப்பது இல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இதுகுறித்து பேசிய துணைத் தலைவா் ஆண்டாள் அண்ணாதுரையின் கேள்விகளுக்கு தலைவரும், செயல் அலுவலரும் மௌனம் சாதித்தனா்.
இதனிடையே, தலைவா் வேணி ஏழுமலை திமுக உறுப்பினா்கள் 4 பேரது கையொப்பத்தை மட்டும் பெற்றுக் கொண்டு,
தீா்மானங்களை படிக்காமலும், விவாதம் நடத்தாமலும் கூட்டத்தை முடித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டனா்.
அப்போது பிற உறுப்பினா்கள் செயல் அலுவலா் ஜனனியை சிறைபிடித்தனா். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உறுப்பினா்கள் கௌதம்முத்து, ஜமுனா, சுமித்ரா, யசோதா, மோனிஷா, லோகேஸ்வரி மற்றும் ஆண்டாள் ஆகியோா் பேரூராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.