சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்
சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் காணவில்லை எனச் சுசீந்திரன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததோடு காணாமல் போன ராஜகுமரனைத் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த 30-ம் தேதி காணாமல் போன ராஜகுமரன் தானாகவே வீடு திரும்பினார்.

இதையடுத்து அவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
அப்போது அவர், தன்னை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தி பைக்கையும் செல்போனையும் பறித்து விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.
மேலும் தான் காதலித்து வரும் பெண்ணை மறந்து விடும்படி தன்னைக் கடத்தியவர்கள் மிரட்டியதாகத் தெரிவித்தார்.
ராஜகுமரன் அளித்த தகவலின்படி மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், அகஸ்டின், தி.நகரைச் சேர்ந்த லலித் ஆதித்யா, கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ராஜகுமரனின் செல்போன், பைக் மற்றும் கைதானவர்களின் 5 செல்போன்கள், பைக்குகள், 29,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரித்தபோது ராஜகுமரன் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று உதவி இயக்குநர் ராஜகுமரன் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றிருக்கிறார்.

அப்போது அவ்வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று ராஜகுமரனின் பைக்கை மோதியிருக்கிறது. அதனால் அந்தக் கும்பலுக்கும் ராஜகுமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அதன்பிறகுதான் ராஜகுமரன் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். அவரை காருக்குள் வைத்தே தாக்கிய கும்பல், ராஜகுமரன் காதலித்து வரும் பெண்ணை மறந்துவிடுமாறு மிரட்டியிருக்கிறார்கள்.
அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கடத்தல் சம்பவத்தில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். காதல் விவகாரத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.