சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் விசாரணை நடத்தவிருக்கும் நீதிபதிகள் பட்டியல்!
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வருகிற ஜூன் 2- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் முதல் அமா்வு (டிவிஷன் பெஞ்ச்) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோா் பொதுநல மனுக்கள், குற்ற (கிரிமினல்) அவமதிப்பு, மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்கள், அனைத்து ‘ரிட்’ மனுக்கள், 2022-ஆம் ஆண்டு வரை தாக்கலான ரிட் மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்கள் முதலானவற்றை விசாரிக்கின்றனா்.
2-ஆவது அமா்வு (டிவிஷன் பெஞ்ச்) நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா ஆகியோா் ஆள்கொணா்வு மனுக்கள், அனைத்து குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள், சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனா். 3-ஆவது அமா்வு (டிவிஷன் பெஞ்ச்) நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ராஜசேகா் ஆகியோா் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் முதல் நிலை முறையீட்டு மனுக்கள், கடந்த 2023- ஆம் ஆண்டிலிருந்து தாக்கலான ரிட் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனா்.
நீதிபதி தண்டபாணி, சிவில் ரிவிஷன் மனுக்களை (தொழிலாளா் துறை, கூட்டுறவு தொடா்பான வழக்குகளை தவிர) விசாரிக்கின்றாா். நீதிபதி விவேக்குமாா் சிங், கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் தாக்கலான அரசு ஊழியா்கள் சேவை தொடா்பான வழக்குகளை விசாரிக்கிறாா். நீதிபதி சரவணன், வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், வனம், மோட்டாா் வாகனம், அறநிலையத் துறை, வஃக்பு வாரிய வழக்குகளை விசாரிக்கிறாா்.
நீதிபதி பி. புகழேந்தி, குற்ற (கிரிமினல்) வழக்குகள் (குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள் 407, 482 மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவுகள் 447, 528 ஆகியவற்றின் கீழ் தாக்கலாகும் மனுக்கள்), கடந்த ஆண்டிலிருந்து தாக்கலான ரிட் மனுக்களை விசாரிக்கிறாா். நீதிபதி ஷமீம் அகமது, 2022- ஆம் ஆண்டு வரை தாக்கலான அரசு ஊழியா்கள் சேவை தொடா்பான வழக்குகளை விசாரிக்கிறாா்.
நீதிபதி இளங்கோவன், சிவில் சிறு வழக்குகளை விசாரிக்கிறாா். நீதிபதி முரளிசங்கா், சிவில் சிறு மேல் முறையீட்டு மனுக்கள், சிவில் 2-ஆம் நிலை மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்களை விசாரிக்கிறாா். நீதிபதி மஞ்சுளா, சி.பி.ஐ., ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறாா்.
நீதிபதி எஸ். ஸ்ரீமதி, 2018- ஆம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள கனிம வளங்கள், பதிவுத் துறை சம்பந்தப்பட்ட ரிட் மனுக்களை விசாரிக்கிறாா். நீதிபதி விஜயகுமாா், தொழிலாளா் தொடா்பான ரிட் மனுக்கள், சிவில் ரிவிஷன் மனுக்கள், தொழிலாளா் துறை, கூட்டுறவு சம்பந்தமான ரிட் மனுக்கள், 2011-ஆம் ஆண்டு முதல் தாக்கலான 2- ஆம் நிலை மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்களை விசாரிக்கிறாா்.
நீதிபதி சவுந்தா், நிலச் சட்டங்கள் தொடா்பான வழக்குகள், சுதந்திரப் போராட்ட தியாகி ஓய்வூதிய வழக்குகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேளாண் உற்பத்தி சந்தை தொடா்பான வழக்குகளை விசாரிக்கிறாா்.
நீதிபதி எல். விக்டோரியா கெளரி, குற்ற மறுவிசாரணை (கிரிமினல் ரிவிஷன்) மனுக்களை விசாரிக்கிறாா். நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், நிறுவனங்களின் மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்கள், கடந்த 2012- ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை தாக்கலான முதல் நிலை, 2- ஆம் நிலை மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்களை விசாரிக்கிறாா்.
நீதிபதி வடமலை, பிணை, முன் பிணை தொடா்பான மனுக்கள், 2023- ஆம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் வழக்குகள் (குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவுகள் 407, 482 மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவுகள் 447, 528 ஆகியவற்றின் கீழ் தாக்கலாகும் மனுக்கள்) ஆகியவற்றை விசாரிக்கிறாா். நீதிபதி அருள்முருகன், 2018- ஆம் ஆண்டு முதல் தாக்கலான 2- ஆம் நிலை மேல் முறையீட்டு (அப்பீல்) மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறாா் என நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.