சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?
சென்னை மெட்ரோ: 'ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ கார்டை டாப் அப் செய்ய முடியாது' - CMRL சொல்வது என்ன?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பயணிகளின் வசதிக்காக முழுமையாக சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி வந்த பயணிகள் தங்கள் கார்டுகளில் உள்ள இருப்புத் தொகையை சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று CMRL அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆகஸ்ட் 1 முதல் அதன் தற்போதைய பயண அட்டைகளைப் படிப்படியாக நீக்கிவிட்டு, முழுமையாக சிங்கார சென்னை தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றுகிறது.
சென்னை மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரே கார்டு மூலம் நகரப் பேருந்து, மற்றும் பிற பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் சிங்கார சென்னை கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்புத் தொகையை எப்படி மாற்றலாம்?
தற்போது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயணிகள், சென்னை மெட்ரோவின் அனைத்து நிலையங்களிலும் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் தங்கள் கார்டுகளில் உள்ள இருப்புத் தொகையை சிங்கார சென்னை கார்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்தச் செயல்முறை எளிதாகவும் விரைவாகவும் இருக்கும் என CMRL உறுதியளித்துள்ளது. மாற்றத்திற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிங்கார சென்னை கார்டு
சிங்கார சென்னை கார்டு, சென்னை மெட்ரோ மட்டுமல்லாமல், MTC பேருந்துகள், புறநகர் ரயில்கள் சேவைகளிலும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு ஒரே கார்டு மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளை அணுகுவதற்கு உதவுகிறது.
CMRL, அனைத்துப் பயணிகளும் விரைவில் சிங்கார சென்னை கார்டுக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்படும் என்பதால், பயணிகள் தங்கள் இருப்புத் தொகையை மாற்றுவதற்குத் தாமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் தகவல்கள் அறிய பயணிகள் சென்னை மெட்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தில் விசாரிக்கலாம்.