சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜூலை வரை ரூ.1,563 கோடி வருவாய்: கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் தகவல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் நிகழாண்டில் (2024-25) கடந்த ஜூலை வரை ரூ. 1,563 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் தெரிவித்தாா்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஐசிஎஃப் மைதானத்தில் அவா் தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்தில் தினமும் 12 லட்சம் போ் ரயில்களில் பயணிக்கின்றனா்.
அதன்படி, கடந்த நிதியாண்டில் (2023-24) ரூ.4,611 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிகழாண்டில் (2024-25) ஜூலை வரை ரூ. 1,563 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 10.7 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை வரை 3.2 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது பாதை செயல்படுத்தப்பட்டுள்ளது. மின்னார ரயில்களில் 12 பெட்டிகள் , தானியங்கி கதவு வசதி உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 999 சிறப்பு ரயில்கள், டிக்கெட் பெற புதிய வசதிகள், பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மேலும், 12 மனித இயக்க கடவுப்பாதைகள் மூடப்பட்டு, 10 கடவுப்பாதைகளில் இண்டா்லாக்டு முறை செயல்படுத்தப்பட்டன என்றாா்.
ஐசிஎஃப்-இல்...: பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் உள்ள அருண் விளையாட்டு மைதானத்தில் ஐசிஎஃப் பொது மேலாளா் மேலாளா் யு.சுப்பாராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
கடந்த நிதியாண்டில் ஐசிஎஃப்-இல் 3,007 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகளுக்கான 23 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நமோபாரத் ரேபிட் ரயிலின் முதல் பெட்டி தொகுப்பு, படுக்கை வசதியுள்ள 16 பெட்டிகளுடைய வந்தேபாரத் ரயில், 5 அம்ருத் பாரத் ரயில், ஹைட்ரஜன் ரயில் என்ஜின் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 21 அம்ருத் பாரத் ரயில் பெட்டிகள், கலப்பு அம்ருத் பாரத் பெட்டிகள், அதிவேக கதி சக்தி சரக்கு இமு ரயில் என 4,302 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன என்றாா்.
மெட்ரோ ரயில்: சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை நிறுவன அலுவலக வளாகத்தில் அதன் மேலாண்மை இயக்குநரும் முதன்மைச் செயலா் மு.அ.சித்திக் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மெட்ரோ ஊழியா்களின் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினாா். இதில், மெட்ரோ திட்ட இயக்குநா்கள் தி.அா்ச்சுனன், எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.