சென்னையிலிருந்து லக்னௌ புறப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பியது: அவசரமாக தரையிறக்கம்!
சென்னை: சென்னையிலிருந்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌக்குப் புறப்பட்ட விமானம் இன்று(மே 27) காலை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து 160 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை(மே 27) அதிகாலை 5.40 மணிக்கு லக்னௌக்கு புறப்பட்டது. இந்த நிலையில், நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவால் அவசரமாக மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நிலை உருவானது.
இதனையடுத்து, இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பின், அந்த விமானம் காலை 6.30 மணிக்கு சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தயார் நிலையிலிருந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ முதலுதவி சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன்பின் அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, காலை 7.20 மணிக்கு அந்த விமானம் மீண்டும் லக்னௌக்கு புறப்பட்டுச் சென்றது.