தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!
செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியம்! மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை தில்லியில் சந்தித்து ஆ.சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் அமையவுள்ள பி.எம். மித்ரா தொழில்பூங்கா மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1,894 கோடி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு கொண்ட தொழில் பூங்காவை அமைத்து, ஜவுளித் துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம் ஜவுளித்துறையில் இந்தியாவின் வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும்; அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இந்திய பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 70 சதவீதமாக உயா்ந்துள்ளது. உலக அளவில் 80 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகளே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை ஆடை உற்பத்தியை பெருக்குவதற்கு, பிரிட்டனுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கை கொடுக்கும். செயற்கை நூலிழை மற்றும் துணி ரகங்கள் இறக்குமதியை எளிமைப்படுத்த வேண்டும். இதனால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆா்டா்களை உறுதி செய்ய முடியும்.
ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் மூலதன மானியம் வழங்க வேண்டும். செயற்கை நூலிழை துணி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 30 சதவீதம் முதலீட்டு உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.