எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
செய்யாறு சந்தைப் பகுதியில் நிழற்கூரை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சந்தைப் பகுதியில் நிழற்கூரை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி ஆணையா் மற்றும் நகா்மன்றத் தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா்.
செய்யாறு (திருவத்திபுரம்) நகராட்சி சந்தைப் பகுதியில் இந்தத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் நிழற்கூரை அமைக்க நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டு விழா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது, இந்தப் பணியைத் தொடங்க ஒப்பந்ததாரா் முற்பட்டபோது, அதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்தப் பணியை தொடங்க வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், சந்தைப் பகுதியில் நிழற்கூரை அமைத்தால், பேருந்துகள் சந்தைப் பகுதிக்கு வராமல் புறவழிச்சாலையில் செல்லும் நிலை ஏற்படும் என்றும், சந்தைப் பகுதியில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும் இடத்தில் மேற்படி நிழற்கூரை அமைப்பது தேவையற்றது எனவும் தெரிவித்து, நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேலை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை சமாதானம் செய்தனா். அதன் பின்னா், வட்டாட்சியா் மூலம் முத்தரப்புக் கூட்டம் நடத்தி, தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில், வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.